கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என பாரதியின் கூற்றை உறுதிப்படுத்தியிருக்கும் தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டாம். இந்தி படித்தவர்கள் கோவையில் பாணி விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆற்றிய உரை பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் மற்றும் பாரதியார் பல்கலை கழக துணை வேந்தர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக நிகழ்வில் பங்கேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் உயர் கல்வியில் படித்து வருகின்றனர். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்கிற பாரதியாரின் கூற்று மேலும் வலுப்பெற்று வருகிறது. இது தான் திராவிட மாடல்.
தமிழகம் இந்திய அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. இது பெரியார் தோன்றிய மண். அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அளவில் தமிழகம் 53 சதவீதம் உயர் கல்வியில் உயர்ந்து உள்ளோம். தமிழக முதல்வர் கல்வி, சுகாதாரம் இரண்டு கண்கள் போல என கூறுகிறார். கல்வித்துறை மற்றும் தொழில்துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து படிக்கும் போதே மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கவர்னரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நாங்கள் இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. இந்தியை தமிழகத்தில் திணிக்க வேண்டம் என்பதே எங்களது கோரிக்கை. தமிழகத்தில் தாய் மொழியாக தமிழ், சர்வதேச மொழியாக ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் கூறினர். ஆனால், வேலை கிடைக்கிறதா?. இந்தி படித்தவர்கள் இங்கு கோவையில் பானி பூரி தான் விற்பனை செய்கின்றனர்.
நாங்கள் சர்வதேச மொழியான ஆங்கிலத்தை படித்து வருகிறோம். எதற்கு மாற்று மொழி. நாங்கள் புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால், மொழியில் எங்கள் சிஸ்டத்தை தான் பின்பற்றுவோம். இதுதான் எங்கள் மாணவர்களுக்கும் நலன் பயக்கும்.
தமிழக முதல்வர், மாணவர்களுக்காக தமிழ்நாடு கல்வி கொள்கை குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்த குழுவின் அடிப்படையில் கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும். கவர்னரிடம் எங்களின் உணர்வை தான் வெளிப்படுத்துகிறோம். அதனை புரிந்து கொண்டு கவர்னர் ஒன்றிய அரசிடம் எங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். இந்தி மாற்று மொழி தான். அதனை கட்டாயமாக்க கூடாது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டு தான் கட்டாய மொழியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவது மொழியாக என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். இது தான் தமிழ்நாடு கல்வி கொள்கை குழு மூலம் செயல்படுத்தப்படும்.
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு படிக்கும் போது தொழில் பயிற்சி அளிக்கப்படும். தமிழக முதல்வர் அடுத்த வருடம் பெண்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளார். பெண்கள் உயர் கல்வியில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சிறந்த மாணவர்கள் உருவாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பட்டம் பெற்றவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை கவர்னரிடம் கோரிக்கை வைக்கிறேன். எங்கள் பிரச்சினை, மாணவர்கள் பிரச்சினை ஆய்வு செய்து புதிய கொள்கை குறித்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து பல்கலைகழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பேசுகையில், எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்கவில்லை. எல்லா மொழிகளையும் ஊக்குவிக்கப்படுகின்றன. தமிழ்மொழியை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்கிற நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது என மழுப்பலாக உரையாற்றினார்.
பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம்
பாரதியார் பல்கலை கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற நிலையில் இதனை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு நிகழ்ச்சி நிரல் அழைப்பிதலோடு வழங்கப்பட்ட உறையில் ரூ. 500 பணமும் பதிவாளர் கவரில் வைக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்ட பத்திரிகையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். பல்கலை கழக நிர்வாகம் அதிகார பூர்வமாக செய்தியாளர்களுக்கு லஞ்சம் வழங்குவதாக குற்றம்சாட்டினர். பாரதியார் பல்கலை கழகத்தின் இந்த நடவடிக்கையை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக 37 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்ட செயலை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் பங்கேற்ற செய்தியாளர்களுக்கு பதிவாளரின் பெயர் கொண்ட கவரில் வைத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஊடக நெறிகளுக்கு எதிரான இந்த செயலை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்றம் வலியுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பல்கலைகழக நிர்வாகம் ஊடகவியலாளர்களுக்கு கொடுத்த பணத்தை துணை வேந்தர் காளிராஜூவிடமே திருப்பிக்கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.