districts

குற்றவாளிகளை கைதுசெய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, ஏப்.21- தருமபுரி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுக்கவேண்டும் என தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியை சேர்ந்த தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   16 வயதுடைய முதல் பெண் குழந்தை  அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததால் தருமபுரியில் உள்ள தனது உறவினரான  ஓம்சக்தி-கவிதா தம்பதியினரின் வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்நிலையில் மாணவியை  கவிதா துணையுடன் இவரது கணவர் ஓம்சக்தி மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பள்ளி மாணவி ஒத்துழைக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கவே, கவிதா துணையுடன் ஓம்சக்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் மாணவி மயக்கமடைந்து உள்ளார். சிலமணி நேரம் கழித்து மயக்கம் தெளியவே, ஓம்சக்தியும் கவிதாவும் இந்த விசயத்தை வெளியில் சொன்னால் உன் அம்மாவை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் மாணவி பயந்து கொண்டு தனக்கு நேர்ந்த அநீதியை வெளியில் சொல்லவில்லை.  இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஓம்சக்தி மாணவியின் எதிர்ப்பை மீறி, மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி ஓசூரில் வசிக்கும் தனது தாயிடம்  சென்று தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர்  தருமபுரியில் உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களிடம் தன் மகளுக்கு நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உதவியுடன் மாணவியின் தந்தை ‘’தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஓம்சக்தி உடந்தையாக இருந்த கவிதா ஆகியோர் மீது சட்டரீதியாக வழக்கு பதிவு செய்யவேண்டும்’’ என தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இதனை தொடர்ந்து   அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட பொருளாளர் பி.ராஜாமணி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, நகர செயலாளர் நிர்மலாராணி, நிர்வாகி கல்பனா ஆகியோர் நேரில் சென்று மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மீது வழக்கு பதிந்து கைதுசெய்ய வேண்டும் என தருமபுரி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினரிடம் வலியுறுத்தினர்.