districts

img

தீக்கதிர் என்கிற சொல்லும், நெல்லும் கொடுத்தது கோவை தொழிலாளி வர்க்கம்: மதுக்கூர் ராமலிங்கம் பெருமிதம்

தீக்கதிர் என்கிற சொல்லும் நெல்லும் கொடுத்தது கோவை தொழிலாளி வர்க்கம் இதனை மென்மேலும் வளர்த்தெடுத்து பாதுகாப்பது நமது கடமை என கோவையில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் விடுதலை போராட்ட வீர்ர் சங்கரய்யா நூற்றாண்டு விழா, வெண்மணி தியாகிகள் நினைவு தினம், தீக்கதிர் நாளிதழ் சந்தா ஒப்படைப்பு என்கிற முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.

காந்திபுரம் கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு கட்சியின் கோவை மாவட்டக்குழு செயலாளர் வி.இராமமூர்த்தி தாலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் வரவேற்புரையாற்றினார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பி.ஆர்.நடராஜன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் மற்றும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், சி.பத்மநாபன், எம்.கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், விநியோக மேலாளர் ஏ.நெல்சன்பாபு, விளம்பர மேலாளர் கே.அழகப்பன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகள், இடை குழுக்கள், மாவட்டக்குழுக்கள் மூலம் 578 தீக்கதிர் நாளிதழுக்கான சந்தாக்கள் முதல் தவணையாக சேர்க்கப்பட்டு இதற்கான சந்தா தொகை 11 லட்சத்து 72 ஆயிரத்து 270 ரூபாயை கட்சியின் தலைவர்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், பங்கேற்று கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், கோவை உழைப்பாளி மக்களுக்கு, செங்கொடி இயக்கத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு. பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்திற்கு மக்கள் கவிஞன் என்கிற பெயரை கொடுத்து கௌரவித்தது கோவை உழைப்பாளி மக்கள்தான். இதேபோல அன்று ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் திரிபுவாதத்திற்கும், திருத்தல்வாதத்திற்கு எதிரான ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் தலைவர்களிடம் உருவானது. அந்நேரத்தில் தீக்கதிர் என்கிற சொல்லும், நெல்லும் கொடுத்து உருவாக்கியவர்கள் கோவை தொழிலாளி வர்க்கத்தினர். ஆகவே தீக்கதிரின் முதல் இதழின் முகப்பில் தீப்பந்தம் ஒன்றும் லெனின் படமும் இடம்பெற்றிருக்கும். இதில் எழுதப்பட்ட முதல்வார்த்தையே கோவை தொழிலாளி வர்க்கம் ஏந்திக்கொடுத்த இந்த நெருப்பை ஏந்தி தீக்கதிர் வெளி வருகிறது என்கிற வாசகம் அதில் இடம்பெற்றிருக்கும். மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் மாறியது. மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு தீக்கதிர் முதன்மை பங்குவகிக்கிறது என்றால் அது மிகையாகாது. இதன் முதல் ஆசிரியர் தோழர் என்.சங்கரய்யா இதன்பிறகு முத்தையா போன்ற தலைவர்கள் இருந்தனர். அத்தகைய பெருமை மிக்க தீக்கதிர் நாளிதழை மென்மேலும் வளர்தெடுப்பதில் கோவை தொழிலாளி வர்க்கத்திற்கு பெரும் பங்கு உண்டு.  

டிசம்பர் 25 உலகம் முழுவதும் கிருஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அநீதிக்கு எதிராக கையில் சாட்டை எடுத்த ஏசுவும் ஒருவகையில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு முன்னோடியானவர்தான். இதே நாளில்தான் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று பிரகடன படுத்திக்கொண்டவர் சார்லி சாப்ளின். பாசிஸ்ட்டான ஹிட்டலரை எதிர்த்து துணிச்சலோடு தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை எடுத்தவர். அந்த சார்லி சாப்லின் நினைவு  தினம் இன்றுதான் அவரையும் நாம் நினைவு கூர்வோம்.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் உழைப்பாளி மக்களை சவுக்கடியும், சாணிப்பாலையும் கொடுத்து பண்ணை அடிமைகளாக இம்மக்களை கொடுமைப்படுத்தி வந்தனர் பண்ணையார்கள். சூரியன் உதிப்பதற்கு முன் வயலில் இறங்கி சூரியன் மறைவிற்கு பின்னரே வயலில் இருந்து மேலேறே வேண்டும். பிள்ளையை பெற்ற கையோடு வயலுக்கு செல்ல வேண்டும் என்கிற கொடுமை இருந்த காலம் அது. இதனை மாற்றிக்காட்டியவர் தோழர் பி.சீனிவாசராவ்.

ஏசு நாதர் பிறந்து விட்டார் தேவகுமாரன் பிறந்துவிட்டார் என உலகமே கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில். வேளாங்கண்ணியில் ஏற்றப்பட்ட வெளிச்சத்தை இன்றுகூட கீழ வெண்மணியில் இருந்து பார்க்க முடியும். அன்று அங்கு வேளாங்கண்ணியில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தபோது இங்கு கீழவெண்மணியில் குடிசைகளை எரித்து பண்ணையார்கள் கிருஸ்துமஸ் கொண்டாடிக்கொண்டிருந்தனர். அதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் 44 அப்பாவி உயிர்களை தீக்கிரையாக்கினர். வெண்மணி தியாகம் என்பது நெடிய வரலாறு. இது அரைப்படி நெல் கூடுதலாக கேட்டதற்கான போராட்டம் என்று சுறுக்கி பார்க்க கூடாது. தீண்டாமைக்கெதிரான நெடிய போராட்டத்தின் ஒருபகுதி. அது வர்க்க போராட்டம். சமூக நீதிக்கான போராட்டம். மூன்று படி உயர்த்தி தருகிறோம். குடிசையில் பறக்கிற செங்கொடியை இறக்குங்கள் என்றார்கள் பண்ணையார்கள். ஆனால் வெண்மணியின் செங்கொடி இயக்கத்தின் புதல்வர்கள் சொன்னார்கள் எங்களை தலை நிமிர வைத்த செங்கொடியை ஒருபோதும் இறக்க முடியாது என்று உறுதியை வெளிப்படுத்தியவர்கள் வெண்மணியின் எளிய மக்கள். ஆகவே இன்றும் தஞ்சை தரணியில் உழைப்பாளி மக்களால் பி.சீனிவாசராவ் குலசாமியாக பார்க்கப்படுகிறார். கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள் என்கிற கேள்வி எழுப்புவர்களுக்கு இதுதான் பதில்.

இன்று நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறார் தோழர் என்.சங்கரய்யா. தமிழ் இலக்கியத்தில் கரை கண்டவர் சங்கரய்யா, எதைப்பார்த்தாலும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தோடு பார்ப்பவர். இவரின் பொதுவாழ்க்கை துவங்கியதே இந்தி திணிப்பை எதிர்த்த மொழி போராட்டத்தில்தான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஏ ஹனார்ஸ் பட்டம் படித்து கொண்டிருந்தபோது கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அதே அமெரிக்கன் கல்லூரி இன்று சங்கரய்யாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது என்பதுதான் பெருமை. தேசத்திற்காக, விடுதலைக்காக, பாட்டாளிகளுக்காக, மொழிக்காக போராடியவர் சங்கரய்யா. பிரிவினைக்குரல்கள் எப்போது எழுந்தாலும் அப்போதெல்லாம் சங்கநாதம் செய்தவர் சங்கரய்யா. ஆகவே சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாள் மார்க்சிஸ்ட் கட்சியினர் மட்டுமல்லாது பொதுக்கொண்டாட்டமாகவே அது மாறியது. தோழர் சங்கரய்யா தீக்கதிர் நிலைத்து நிற்க வேண்டும் என்று எண்ணுபவர். ஆகவே அவர் எந்த கூட்டத்தில் பேசினாலும் மறக்காமல் தீக்கதிர் படியுங்கள் என்கிற வார்த்தையை சொல்லாமல் முடிக்கமாட்டார்.

சங்கரய்யா பேசும்போது வரலாறை கைகளை உயர்த்தி கட்டளை இடுவது போன்று இருக்கும். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் என்கிற நிலையை தாண்டி எல்லோரும் கொண்டாடப்படும் தலைவராக இருக்கிறார். சங்கரய்யா காலத்தில் நாம் வாழ்வது பெரும் வாய்ப்பு. அத்தகைய தலைவர்களின் லட்சியங்களை மெய்ப்பிப்பதற்கு உழைப்பாளி வர்க்கத்தை திரட்டுவோம் வென்று காட்டுவோம் என்றார்.

சர்வாதிகாரத்தை விவசாயிகள் போராட்டம் தகர்த்திருக்கிறது

முன்னதாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் பேசுகையில், மக்கள் இயக்கத்தை கட்டியமைத்தால் எதுவும் சாத்தியம் என்பதை. ஓராண்டு தலைநகரில் நடைபெற்ற விவசாயிகளின் கிளர்ச்சி போராட்டம் வென்று காட்டியுள்ளது. ஒன்றிய பாஜக அரசு இப்போராட்டத்தை ஒடுக்க எத்தனை சீர்குலைவு வேலைகளை செய்தது என்பதை நாம் அறிவோம். யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிற சர்வாதிகாரத்தை விவசாயிகள் போராட்டம் தகர்த்திருக்கிறது, தோற்கடித்திருக்கிறது. இதுபோன்ற வர்க்க பிரச்சனைகள் உள்ளது. கார்ப்ரேட்டுகளுக்கு எதிரான கோபம் மக்களிடையே உள்ளதை களத்தில் தெரிகிறது. நமது பரந்து பட்ட திரட்டலாலும், நீடித்த போராட்டத்தாலும் ஏற்றத்தாழ்வு நீடிக்கிற இந்நிலையை மாற்றி அமைக்க முடியும். அத்தகைய ஒன்றுபட்ட போராட்டத்தை துவக்க இந்த வெண்மணியின் தியாக நாளில் உறுதியேற்போம் என்றார்.

இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர் நன்றி கூறினார்.

செம்மலர்

இந்நிகழ்வில் கட்சியின் ஆதரவாளரான மோகன் பாராட்டப்பட்டார். தனி நபர் ஒருவராக மார்க்சிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய ஏடான செம்மலர் மாத இதழை மாதம் ஆயிரம் பிரதியை தன் சொந்த நிதியில் பெற்று அதனை விற்று வருகிறார். மாநிலத்தில் எங்கு கட்சி அமைப்புகள் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றாலும் அங்கு சென்று செம்மலரை விற்று அதன் ஈவுத்தொகையில் தனது பயணத்திற்கான கட்டணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இதர தொகையை சம்பந்தப்பட்ட கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கே கொடுத்துவிட்டு வருகிறார்.

மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற தோழர் மோகன் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த பணியை மேற்கொண்டு வருகிறார். இவரை கௌரவிக்கும் வகையில் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

கட்சியின் ஆதரவாளரான ஒருவரே இத்தகைய முயற்சியை சிறப்பாக முன்னெடுக்கும்போது கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள் இதனைவிட ஒருபடி மேலே நமது கட்சியின் பிரசுரங்களை கூடுதலாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்த வேண்டும் என்கிற அறைகூவல் இந்நிகழ்வில் விடப்பட்டது.