districts

மழையால் கோவை குளர்ச்சியான சூழல்

கோவை, ஆக.12- கோவை, தடாகம் சாலை இடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக வறண்ட வானிலையே காணப்பட்டு வந்தது. அவ்வப்போது மேகமூட்டமாக இருந்த போதும் அடிக்கடி வெயில் உக்கிரமாக சுட்டெரித்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  இந்நிலையில், கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம், கோவில் மேடு, டிவிஎஸ் நகர், எம்ஜிஆர் நகர், சிவாஜி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதியம் ஒரு மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இந்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சாலையோரங்களில் வெள்ள நீர் தேங்கி நின்றது. தடாகம் சாலையில் தோண்டப்பட்டு இருந்த குழிகள் படிப்படியாக மூடப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதனிடைய சில இடங்களில் சாலைகள் அமைக்கப்படாததால் அந்த பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.