தருமபுரி, மார்ச் 28- ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி ஒன்றியம் செம்மான்டகுப்பத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக்கொண்டே இருக்கிறார். தமிழக ஆளுநரின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் எம்.மீனாட்சி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஏ.ஜெயா மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி ரங்கநாயகி,ஒன்றிய பொருளாளர் மாது ஆகியோர் உரையாற்றினர்.