districts

அரூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை மாதர் சங்கத்தின் தொடர் தலையீட்டால் கைது

தருமபுரி, ஜூன் 11- அரூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை, மாதர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக அரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே 14 வயது சிறுமி, அரசுப்பள்ளயில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பாட்டி வீட்டிலிருந்த சிறுமியை, அதேபகுதியைச் சேர்ந்த சிறைத்துறையில் வார்டனாக பணியாற்றி வரும் பார்த்தீபன் என்பவர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரின் தயார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, நடந்தவை தெரியவந்தது. இதனையடுத்து இதற்கு காரணமான பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் தயார் அரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போக்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடந்த ஏப்.24 ஆம் தேதியன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பார்த்தீபன் கைது செய்யப்படவில்லை. அதன்பின் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டது. இதற்கிடையே புகாரளித்ததால், சிறுமி குடும்பத்திற்கு பார்த்தீபன் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். எனவே, குற்றச்செயலில் ஈடுபட்ட பார்த்தீபனை கைது செய்ய வேண்டும். அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஜூன் 8 ஆம் தேதியன்று அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 15 தினங்களுக்குள் பார்த்தீபனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளியன்று பார்த்தீபனை அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தனது மகளுக்கு எதிரான இத்தகைய கொடுமைக்கு எதிராக தொடர் போராட்டம் மேற்கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களுக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நன்றி தெரிவித்தார்.