கோவை தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில் விறகு எடுத்துச் சென்ற தொழிலாளியை ஒற்றை காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், நரசிபுரம் சுற்றுவட்டார வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் எல்லையோர குடியிருப்புகளுக்குள் அவ்வப்போது உலா வருகிறது. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூர் அருகே உள்ள அட்டுக்கல் பழங்குடி குடியிருப்பில் வசித்து வரும் ரங்கசாமி (45) என்பவர், அட்டுக்கல் வனப்பகுதியை ஒட்டிய புளியந்தோப்பில் விறகு எடுப்பதற்காகச் சென்றார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை ரங்கசாமியைத் தாக்கியது. மேலும் அதே பகுதியில் காட்டு யானை நின்றதால் உடனடியாக அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு, உடனடியாக ரங்கசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரங்கசாமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.