கோவையில் பிடிக்கப்பட்ட அரிதான வெள்ளை நாகம் மாங்கரை வனப் பகுதிக்குள் விடப்பட்டது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை – குறிச்சி, சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக காணப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகம் மழையில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், அந்த நாகத்தை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
இந்நிலையில், வெள்ளை நிறத்தில் காணப்படும் பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நாகம் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நிற நாகங்கள் மிகவும் அரிதானது என தெரிவித்தனர்