கோவை, அக்.28- கோவை, வாலாங்குளம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கும் புலிக்குத்திக் கல்லை அரசு மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை வாலாங்குளத்தின் கிழக்குப் பகுதியில் குடியிருப்புகள் இருந்த இடத்தில், புலிக்குத்திக் கல் ஒன்றை அப்பகுதி மக்கள் வணங்கி வந்தனர். குளத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்ட நிலையில், தடுப்புச் சுவர் அமைப்பதற்காக அங்கிருந்த புலிக்குத்திக் கல் அகற்றப்பட்டது. இந்த நிலையில் அந்தக் கல் அப்பகுதியில் உள்ள மரத்தின் அடியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. வரலாற்று ஆவணங்களில் ஒன்றான இந்தக் கல்லை மாவட்ட நிர்வாகம் மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி மணிகண்டன் கூறும்போது, முந்தைய காலங்களில் வன விலங்குகளிடம் இருந்து மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்கும்போது உயிரிழக்கும் வீரனின் நினைவாக புலிக்குத்திக் கல் அமைக்கப்பட்டு வந்துள்ளது. இதை புலிக்குத்திக் கல் அல்லது புலிக்குத்தி பட்டான் நடுகல் என்று அழைப்பார்கள். வாலாங்குளம் பகுதியில் அதுபோன்ற பழைமையான புலிக்குத்திக் கல்லை அங்கு வசித்து வந்த மக்கள் வணங்கி வந்துள்ளனர். தற்போது அந்தக் கல் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதை மீட்டு குளக்கரையில் பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என்றார்.