districts

img

வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி ஒன்றிய அரசை கண்டித்து எம்எஸ்எம்இ ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர், டிச.9 - வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய அரசை கண்டித்து எம்எஸ்எம்இ தொழில் முனைவோர் சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு வணிக பயன்பாட்டு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியை நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே, மூலப் பொருட்களின் விலை, நிலையற்ற தன்மையால் தொழில்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. தற்போது, மூலப்பொருட்களின் விலை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததன் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப, உலக சந்தையில் இருக்கும் விலைவாசிகளை உள்ளூர் சந்தைகளில் நடைமுறைப்படுத்துகிறது.

 மேலும் மூலப்பொருட்களை பதுக்கி வைத்து, செயற்கையாக விலையை உயர்த்தி, கொள்ளை லாபம் அடித்து வருகிறது. இந்நிலையில், வணிக பயன்பாட்டு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி நிர்ணயித்திருப்பது, ஒட்டுமொத்த சிறு-குறு தொழில்களையும் நிர்மூலம் ஆக்கிவிடும் என தொழில் முனைவோர்கள் அஞ்சுகின்றனர். இதன் வெளிப்பாடாகவே கோவையில் எம்எஸ்எம்இ சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மேலும், மாநில அரசால் ஏற்றப்பட்ட மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றையும் கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் தலைவர் தி.மணி தலைமை வகித்தார்.

இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோயம்புத்தூர் கம்ப்ரசர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் எம்.ரவீந்திரன், கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் செயலாளர் கே.பாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.