districts

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து: 10 பேர் படுகாயம்

சேலம், மே 30- சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தனியார் ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து கோவைக்கு, சேலம் வழியாக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்தினை கேரளப்பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் ரமேஷ் என்ற வாலிபர் ஒட்டிச் சென்றார். சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் ஆம்னி பேருந்து வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் இடது புறம் முழுவதுமாக சேதம் அடைந்தது.  இதில், பேருந்தில் உறங்கி கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் ஒருவருக்கு கால் முறிந்தது. உயிருக்கு ஆபத்தாக உள்ளவர்கள் குறித்தும், காயம் அடைந்தவர்கள் விபரங்கள் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.