கிருஷ்ணகிரி,அக்.26- சாலை வசதி இருந்தும், பேருந்துவசதியில்லாததால், வேப்பனப் பள்ளி அருகே 4 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் 8 கிமீ தூரம் நடந்தே பள்ளிக்கு செல்லும் நிலையுள்ளது. வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள் ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர், சோமநாதபுரம், கங்கசந்திரம். இக்கிராம மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவசாயிகள் தினமும் குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, சூளகிரி பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இக்கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ள நிலையில் 6 ஆம் வகுப்பு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு மாணவர்கள் குருபரப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால், குருபரப்பள்ளிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் தினமும் 8 கி.மீ. தூரம் நடந்தே சென்று வருகின்றனர்.