கிருஷ்ணகிரி, ஏப். 12- பொதுப் பாதையை ஆக்கிரமித்தவருக்கு ஆதரவாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நஞ்சுண்டபாளையம் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியம் நஞ்சுண்டபாளையம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அலேசெட்டி கிராமத்திற்கும், பள்ளிக் கூடத்திற்கும், பேருந்துக்கும் சென்று வர பேவநத்தம் தரப்புக்கு உட் பட்ட பொது மாட்டு வண்டிப் பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அதே கிராமத்தில் உள்ள சீனப்பா பேவநத்தம் தரப்பு பொது மாட்டு வண்டி பாதையை மறித்து, மக்களை அந்த வழியில் செல்ல விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து சீனப்பாவிடமும், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமாரிடமும் கேட்டுள்ளனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ள சீனப்பாவுக்கு ஆதரவாக மக்களை ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் காலம்காலமாக பயன்படுத்தி வந்த பொது மாட்டு வண்டி பாதையை ஆக்கிரமித்துள்ள சீனப்பாவிடம் இருந்து அதை மீட்க வேண்டும், சீனப்பா விற்கு ஆதரவாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி னர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.