கிருஷ்ணகிரி, ஜன. 3- பெரும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்காக சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி பகுதியில் 5ஆவது சிப்காட் வளாகம் அமைக்க அளவீடு நடைபெற்று வருகிறது. மூற்போகம் விளையக்கூடிய தென்பெண்ணை ஆறு மற்றும் கால்வாய்கள் பாயும் சிறு குறு விவ சாயிகளின் வளமான 3,400 ஏக்கர் விவசாய நிலங்களை அனுமதியின்றி கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் இந்த திட்டத்தை சிப்காட் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உத்தனப் பள்ளி ஊராட்சி ராஜாஜி நகர், நெருப்பு குட்டை கிராமத்தில் வேணு தலைமையில் வயல்களில் இறங்கி தொடர் போராட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேசன், நிரவாகிகள் சாந்தா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 1952ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி கேஆர்பி அணை கட்டுவதற்காக சொந்த நிலம் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்ட 6 கிராம மக்கள் சூளகிரி மலைப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதில் எங்கள் குடும்பமும் ஒன்று. 65 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றி சூளகிரி வட்டம் ஜிஞ்சுப்பள்ளி மலை கிராமத்தில் நிலத்தை வாங்கி சமன்படுத்தி நல்ல முறையில் விவசாயம் செய்து வரு கிறோம். இந்நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகமும், சிப்காட்டும் எங்கள் நிலம் போலவே சிறு குறு விவசாயிகளின் நல்ல விவசாய நிலங்களையும், அபகரித்து அடி மாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு தானம் கொடுக்க முயற்சிப்பதை உயிர் போனாலும் அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயி வேணு கூறினார்.