கிருஷ்ணகிரி, ஜூன் 8- பராமரிப்பு உதவித்தொகை மாதம் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் காவேரிப்பட்டினம் ஒன்றிய 3ஆவது மாநாடு அரசம்பட்டியில் நடைபெற்றது. ஒன்றியப் பொருளாளர் கோட்டீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் திருப்பதி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலப் பொருளாளர் சக்கரவர்த்தி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வெண்ணிலா வரவேற்றார். பிரபாகரன் நன்றி கூறினார். இதில் செந்தாமரைச்செல்வி, தனலட்சுமி, மாதன், ஆறுமுகம், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகளுக்கு 5,000 ரூபாய் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும், 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், இலவச வீடு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், அரசுத் துறையில் 4 விழுக்காடும் தனியார் துறையில் 5 விழுக்காடும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியத் தலைவராக கோட்டீஸ்வரன், செயலாளராக முருகன், பொருளாளராக வெண்ணிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.