districts

வட்ட மையங்களிலேயே முகாம்: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப். 8- மாற்றுத்திறனாளிகள் சிரமங்களை, செலவினங்களை தவிர்க்க  அந்தந்த வட்டங்களிலேயே முகாம் களை நடத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் அவ்வப்போது நலதிட்ட உதவிகள் வழங்குவது நடை பெற்று வருகிறது. கடந்த மார்ச் 28, 29, 30 தேதிகளில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வருகையை ஒட்டி 2021 - 2022ஆம் நிதி  ஆண்டுக்கான மூன்று சக்கர ஸ்கூட்டர் கள் பெறும் பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒரு சிலருக்கு மட்டும் அமைச்சரால் மூன்று சக்கர ஸ்கூட்டர்கள்  மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அலுவலகத்திலேயே வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி ஓசூரில் வழங்கு வதாக அறிவிக்கப்பட்டது.     அங்கி ருந்து வாகனத்தை சொந்த ஊர்களுக்கு ஓட்டிச் செல்வது, அல்லது எடுத்துக் செல்வது சிரமத்தையும், கடும்  செலவினங்களையும் ஏற்படுத்தும் என்று பல மாற்றுத்திறனாளிகள் அப்போதே கருத்து தெரிவித்தனர். ஏப்ரல் 1ஆம் தேதி மூன்று சக்கர  வாகனங்கள் பெற ஓசூருக்கு வேறு  வழியின்றி வந்தனர். தேர்வு செய்யப் பட்ட பயனாளிகள் அனைவருக்கும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கப் பட்டது.

காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளி கோடீஸ்வரன் என்பவர்  ஓசூரில் இருந்து மூன்று சக்கர வாக னத்தை எடுத்துச் செல்ல 3,000 ரூபாய் டெம்போ வாடகை செலவு  செய்துள்ளார். அதேபோல் ஊத்தங் கரை போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, சிங்காரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த  சில மாற்றுத்திறனாளிகள் கடன் வாங்கி 3,000 ரூபாய்க்கும் மேலாக செலவு  செய்து, சிரமப்பட்டு மூன்று சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இனி வரும் காலங்களில் வெகு தூரத்தில் முகாம்கள் நடத்துவதையும், சிரமங்களையும், கடும் செலவினங்க ளையும் ஏற்படுத்துவதை தவிர்க்க  அருகில் அந்தந்த வட்ட மையங்களி லேயே முகாம் நடத்த வேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத் தலைவர் திருப்பதி, மாவட்டச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவல ரிடம் வலியுறுத்தியுள்ளனர்.