districts

img

ஊதிய உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 19- ஓசூர்  மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில்  ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. ஓசூர் சிப்காட் பகுதியில் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளி  40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு ப்ரீ கேஜி முதல், +2 வரை  7000 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடைநிலை பணியாளர்கள், ஓட்டுநர்கள் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் என 650க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.    இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று துவங்கிய காலத்திலிருந்து இன்று வரை 60 விழுக்காடு ஊதியம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.தற்போது பள்ளி திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.    இந்நிலையில் ஆசிரியர்களுக்கு அதே குறைக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர். ஊதியம் குறித்த உடன்பாடு எட்டப்படாததால் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த  ஓட்டுநர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி வளாக அறை ஒன்றில் அமர்ந்து மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்குச் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊதிய உயர்வு குறித்து நல்ல முடிவு எட்டப்படும் என அரசு அதிகாரிகள் கூறிய தன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமாகி இரவு 9.30 மணிக்கு  போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு சென்றனர்.