யமஹா தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியு சங்கம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள யமஹா நிறுவனத்தில் தொழிலாளர்கள் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு மே 3 அன்று நடைபெற்ற தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதற்காக நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) 783 வாக்குகள் பெற்றது. நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திர யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் வெறும் 27 வாக்குகளே பெற்றது. 7வாக்குகள் செல்லாதவை . இந்த மாபெரும் வெற்றிக்காக யமஹா தொழிலாளர்கள் பொருளாதார இழப்புகள்,ஆலைக்குள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு இந்த வெற்றியை அடைந்துள்ளனர். சிஐடியு என்கிற தொழிற்சங்கத்தை அதன் அச்சு அசலோடு தேர்ந்தெடுத்த யமஹா தொழிலாளர்களுக்கு சிஐடியு மாவட்டக் குழு புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
யமஹா தொழிலாளர்களின் போராட்ட பயணத்தில் சிஐடியு தமிழ் மாநிலக்குழு மற்றும் தமிழக முழுவதும் அனைத்து வகையான போராட்டங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டு தொழிற்சங்க உரிமைக்கான இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் சங்கங்களுக்கும் இந்திய யமஹா மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
எப்போதெல்லாம் யமஹா தொழிலாளர்கள் போராடினார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ஒரே அரசியல் இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமைக் குழு
விற்கும் யமஹா தொழிலாளர்களுக்காக ஒவ்வொரு முறையும் குரல் கொடுத்து வாதாடிய மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சிஐடியு மாவட்டக்குழு சார்பிலும் யமஹா தொழிலாளர்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் அமைதிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தொழில் நல்லுறவுக்கும் சரியான தீர்வு தொழிலாளர்களின் பெரும்
பான்மை தொழிற்சங்க அங்கீகாரம் தான் என்கிற அனுபவத்தை இந்த தேர்தலில் மூலம் இந்தியா யமஹா தொழிலாளர்கள் கொடுத்திருக்கிற மிகச்சிறந்த தீர்வாக உள்ளது. இந்த சாதனை இப்போது யமஹா நிறுவனத்தில் மட்டுமே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்
சிறந்த முடிவுகளை எட்டுவதற்கும் தொடர்ச்சியாக தொழிலாளர் நிர்வாகத்தின் கோரிக்கை களை தீர்வு காண்பதில் மிகச் சிறந்த பங்களிப்பினை நல்கிய தமிழக தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆணையர் தொழிலாளர் துறை உயர் அதிகாரிகளுக்கும் சிஐடியு நன்றி தெரிவித்துக் கொள்கிறது
நீதிமன்றத்தில் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டுவதற்காக இக்காலத்தில் கடுமையாக போராடிய உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், சிவக்குமார், பிரதாபன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழுவிற்கும் சிஐடியு மற்றும் யமஹா தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். இந்த பெரும் போராட்டத்தில் கைகோர்த்த அனைவரையும் சிஐடியு புரட்சிகர வாழ்த்துக்களுடன் நினைவு கூறுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.