காஞ்சிபுரம், மார்ச் 25 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க வருவாய் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த இரு மாதங்களாக காஞ்சிபுரம் , உத்திரமேரூர், திருப்பெரும்புதூர் ஆகிய பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் மீட்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட இளையனார்வேலூர், ஆசூர், காவாந்தண்டலம், மேல்புத்தூர், வேடல் , விச்சந்தாங்கல் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நீர்நிலை பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விளைநிலங்களாக இருந்து வந்தது. வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் வெள்ளியன்று ஆக்கிரமிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேல்புதூர் கிராமத்தில் தொடங்கி 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் பணியில் துணை வட்டாட்சியர் கோமளா, வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் , நீர்வள ஆதார துறை பொறியாளர் மார்க்கண்டேயன் மற்றும் காவல்துறை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.