கள்ளக்குறிச்சி. மார்ச் 26- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் துறையினர் இருசக்கர வாகன விபத்தில் கால் ஒடிந்த நபரின் மீது விசாரணையின்றி வழக்குப் பதிந்துள்ளனர். மனம் தவிழ்த்தப்புத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பா.விஜய். இவர் உளுந்தூர்பேட்டையில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது ஒத்தையடி பாதை வழியாக எதிரில் வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதி கால் உடைந்துள்ளது. இந்நிலையில் திருநாவலூர் காவல் துறையினர் மோதியவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், கால் உடைந்து பாதிக்கப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தன் மீது விசாரணை இன்றி பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பீடு பெற்று தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்தார்.