கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியிருக்கிறது என்று புத்தகதிருவிழா நிறைவு நிகழ்சசியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.
மேலும் ஆட்சியர் பேசியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்முறையாக மக்கள் கொண்டாடும் விழாவாக புத்தகத்திருவிழா நடைபெற்றது. கல்லை புத்தகத்திருவிழா வெற்றி பெற்றுள்ளது. இது தமிழக அரசிற்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் கிடைத்த வெற்றி. சுமார் 100 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அச்சகதார்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் இந்த வெற்றியினால் மீண்டும் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்தால் எங்களை அழையுங்கள் நிச்சயம் கலந்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் ஏறத்தாழ சுமார் 6,000-க்கும் மேற்பட்ட கிராமப் புறங்களைச் சேர்ந்த பெண்கள் பரிசோதனை செய்து பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக புற்றுநோய் மற்றும் மகப்பேறு தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 106 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, மேற்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இப்புத்தகக் கண்காட்சியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பார்வையிடும் வகையில் பள்ளி பேருந்துகளை கொண்டு அழைத்து வந்து, அழைத்துச் சென்ற தனியார் மற்றும் அரசு பள்ளிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. கல்லை புத்தகத்திருவிழாவில் இரவு பகலாக உழைத்து, பொதுமக்கள் புன்னகையுடன் இன்னும் நான்கு நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய கோரிக்கை வைக்கும் அளவிற்கு இதனை நடத்திய அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இந்த புத்தகத் திருவிழாவினை வெற்றி நகரமாக மாற்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எனது நன்றியினையும், புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.