கள்ளக்குறிச்சி,ஜூன் 27 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கிராம ஊராட்சியின் மூலம் குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வியாழனன்று கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடும்பங்களுடன் ஆசனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் வீரமணி அங்கு வந்து விரைவில் குடிநீர் குழாய்களை சரி செய்து தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என வாக்குறுதி அளித்தார். இதையடுத்து பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.