கன்னியாகுமரி, நவ.4- கன்னியாகுமரியில் வியாழன் மாலை நடந்த சிஐடியு மாநில மாநாட்டு கருத்தரங்கில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது: “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு”- இது வள்ளுவர் வாக்கு. திருவள்ளுவர் காலத்தில் சொன்னது இப்போதும் பொருந்தும். விடுதலைக்கு முன்பு பசியற்ற இந்தியாவை - வேலையற்ற இளைஞர்களே இல்லை என்கிற ஓர் இந்தியாவை உருவாக்க- எல்லோருக்கும் எல்லாம் என்கிற ஒரு இந்தியாவை உருவாக்க- வெள்ளையனின் கொள்ளையை முடிவுக்கு கொண்டுவர வெண்டும் என்றுதான் போராடினார்கள். எல்லா அரசியல் இயக்கங்களும் வறுமையை ஒழிப்போம் என்பதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தன. இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்; இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம்; என்பதுதான் அவர்களது முழக்கமாகவும் இருக்கிறது. அப்படி சொல்லித்தான் வாக்கு கேட்கிறார்கள். ஆட்சிக்கும் வருகிறார்கள். இங்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இதுபோன்ற முழக்கங்கள் மூலம்தான் ஆட்சிக்கு வருகிறார்கள். அப்படித்தான் வலதுசாரிகளும் மக்களின் மேம்பாட்டுக்கு பாடுபடுவதாக சொல்லி ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் செய்வது வாக்குகளை பெறுவதற்காக மக்களின் ஒற்றுமையை குலைப்பது, வேற்றுமையை வளர்ப்பது, மக்களை ஒருவருக்கு ஒருவர் மோதவிடுவது, அண்ணன் தம்பியாக இருக்க வேண்டியவர்களிடையே தீரா பகையை ஏற்படுத்துவது; அதற்கு மதத்தை, நிறத்தை, மொழியை, எவையெல்லாம் முடியுமோ அவற்றையெல்லாம் பயன்படுத்துவது என்கிற கொடிய நிலையை பாசிஸ்டுகள் ஏற்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் அதைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தியாவைச்சுற்றி இருக்கிற 7 தேற்காசிய நாடுகளில் எந்த நாட்டோடும் இந்தியாவுக்கு நல்லுறவு இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாடுகளிலிருந்து இந்தியா தனிமைப்பட்டிருக்கிறது. நம்முடைய வெளியுறவு கொள்கை நம்மைச் சுற்றி உள்ள நாடுகள் விசயத்தில் மிக மோசமாக தோல்வி அடைந்திருக்கிறது. எல்லா நாடுகளுடன் நமக்கு நட்புறவு வேண்டும். அதைவிட முக்கியமாக அமைதி வேண்டும். அமைதி இல்லாவிட்டால் ஒரு நாட்டின் வளர்ச்சி சாத்தியப்படாது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிற, ஒரு மதத்துக்கு எதிராக இன்னொரு மதத்தினர் மோதிக்கொள்கிற, யாரைப்பார்த்தாலும் பயந்துபயந்து சாகிற வாழ்க்கை அல்ல அமைதி. இது எதுவும் இல்லாத மன நிம்மதி. அந்த அமைதிதான் ஒருநாட்டுக்கு அவசியமான அமைதி. இந்தியாவில் இன்று பாதிக்கப்பட்டிருப்பது அந்த அமைதிதான். வர்த்தக பற்றாக்குறையில் நாம் இலங்கையின் நிலையை அடைந்திருக்கிறோம். அதுபோல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. நாம் பலவீனப்படவில்லை; டாலர் பலமடைந்து விட்டது என்கிறார் நிதி அமைச்சர். அமெரிக்காவின் டாலர் மதிப்பு பொருளாதார தடையால் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உக்ரைன் போரை காரணம் காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் இந்தியா போன்ற நாடுகள் டாலர் அல்லாமல் அந்தந்த நாடுகளின் பணத்தை தந்தால் போதும், 25சதவிகிதம் குறைவான விலையில் எண்ணெய்யை ரஷ்யா தருகிறது. சீனா போன்ற சில நாடுகள் டாலருக்கு மாற்றாக அந்தந்த நாடுகளின் பணத்தை அனுமதிப்பதால் அமெரிக்க நிலை தடுமாறுகிறது.
இந்தியாவுக்கு இது லாபம். இந்தியாவில் மோடி அரசு பொதுத்துறைகளை விற்று வருகிறது. இதுபோல் பொதுத்துறைகளை விற்ற சிலி போன்ற நாடுகள் பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றன. ஒன்றிய அரசின் இந்த கொள்கைக்கு எதிராக கேரள அரசு பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கிறது. ஒன்றிய அரசு இந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தை நட்டக்கணக்கில் விற்க முனைந்தது. கேரள அரசு அதை கையகப்படுத்தி கேபிஎல் என்கிற பெயரில் லாபகரமாக நடத்தி வருகிறது. பொதுத்துறையை அழித்தும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்தும் ஆட்சி செய்யும் ஆட்சியை அகற்ற தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஜி.செலஸ்டின் தலைமை வகித்தார். பாலபிரஜாபதி அடிகளார், திரைக்கலைஞர் ரோகிணி, ஐடா ஹெலன் உள்ளிட்டோர் பேசினர். கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சேலம் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகளும் மாணவிகளின் நடனமும் நடைபெற்றது.