கின்னஸ் சாதனை புரிந்த இளைஞரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திரைக் கலைஞர் ரோகிணி பரிசு வழங்கி பாராட்டினார்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் குமரி உதய தினக் கருத்தரங்கம் மற்றும் கின்னஸ் சாதனை ஓவியர் ஸ்ரீராஜூக்கு பாராட்டு விழா புதன்கிழமை மாலை தக்கலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமுஎகச குமரி மாவட்டத் தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டயானா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜே.எம் ஹசன் நோக்கவுரை ஆற்றினார்.
தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் கின்னஸ் சாதனை ஓவியர் மஞ்சாலுமூடு ஸ்ரீராஜ் பாராட்டப்பட்டார். அவர் 3,57,216 தீக்குச்சிகளால் சார்லி சாப்பிளின் ஓவியத்தை 24 சதுர அடி அளவில் வடிவமைத்து கின்னஸ் சாதனைப் படைத்தார். இதற்காக அவர் 4 மாதங்கள் தொடர்ந்து உழைத்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை ஓவியரைப் பாராட்டி கவிஞர் அரங்கசாமி பேசினார். தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி பாராட்டிச் சிறப்புரை ஆற்றினார். ஓவியருக்கு தமுஎகச சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த குமரி உதய தினக் கருத்தரங்கில் பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் தமுஎகச குமரி மாவட்டத் துணைத் தலைவர் தக்கலை ஹலீமா, மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி என்ற தலைப்பில் தமுஎகச குமரி மாவட்டத் துணைத் தலைவர் குமரி எழிலன் ஆகியோர் உரையாற்றினர். தமுஎகச குமரி மாவட்டத் துணைச் செயலாளர் மிகையிலான் நன்றி கூறினார். இ ந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.