சிதம்பரம், ஜன. 1- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கால்பந்து போட்டியை துணை வேந்தர் ராம.கதிரேசன் துவக்கி வைத்தார். இதில் கண்ணூர் பல்கலை, கோழிக்கோடு பல்கலைக்கழகம், சென்னை வேல்ஸ் இன் டாஸ் பல்கலை, தமிழ்நாடு விளையாட்டு பல்கலை, திருவள்ளுவர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், வீடியு பெல் காவி பல்கலை உள்ளிட்ட 26 பல்கலைக்கழக அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் கால் இறுதிப் போட்டியில் பெரியார் பல்கலைக்கழக அணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணியை (6 - 0), வேல்ஸ் இன் டாஸ் பல்கலைக்கழகம் அணி சென்னை பல்கலைக்கழக அணியை (5-4), அண்ணாமலை பல்கலைக்கழக அணி புதுவை பல்கலைக்கழகத்தை (10-0), பாரதியார் பல்கலைக்கழக அணி பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை (4-2) வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அதேபோல் கால் இறுதியில் வெற்றி பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சென்னை வேல்ஸ் இன் டாஸ் பல்கலைக்கழகம் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 4 பல்கலைக்கழக அணிகளும் குவாலியரில் நடைபெறும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வைத்தியநாதன், அகில இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பு உடற்கல்வி இயக்குநர் ராம்குமார், பல்கலைக்கழக கல்வி புல முதல்வர் குலசேகர பெருமாள் பிள்ளை, உடல் கல்வித்துறை தலைவர் செந்தில்வேலன், துறை இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.