சிதம்பரம், ஜன. 1- சிதம்பரத்தில் வள்ளலார் வருகையுற்ற 200ஆம் ஆண்டு தொடக்கம், தருமசாலை தொடங்கி 156ஆம் ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152ஆம் ஆண்டு தொடக்கம் என முப்பெரும் விழா நடைபெற்றது. சிதம்பரம் கீழ வீதியில் இருந்து கோலாட்டம், கும்மி உள்ளிட்ட ஆடல் பாடல்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் பேரணியாக வந்தனர். மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி சன்மார்க்க நெறியாளர் களை கவுரவித்தார். வள்ளலார் குறித்து நடைபெற்ற பேச்சு, ஓவிய, கட்டுரை, இசை, ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சீனிவாசன், அன்னபூரணி இசைக்கச்சேரியும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், சிதம்பரம் உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமன், இந்து அறநிலையத்துறை கடலூர் மண்டல செயற்பொறியாளர் கலையரசு, உதவிக்கோட்ட பொறியாளர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.