கடலூர், மார்ச் 23- பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய பட்டதாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (22), டிப்ளமோ பட்டதாரி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை 2016 ஆம் ஆண்டு முதல் காதலிப்பதாக கூறி அவரிடம் பழகி வந்துள்ளார். திருமண ஆசை கூறி நெருங்கி பழகியதால் மாணவி இரண்டு முறை கர்ப்பம் தரித்தார். திருமணம் செய்துகொள்ளுமாறு பலமுறை கூறியும் தமிழ்ச்செல்வன் மறுத்ததுடன், மாத்திரை மூலமாக கருவை கலைத்துள்ளார். இதுகுறித்து 2019 ஆம் ஆண்டு, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்கு பதிந்து தமிழ்செல்வனை கைது செய்து அவர் மீது கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், தமிழ் செல்வத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அரசிடமிருந்து ஏதாவது ஒரு நிதியுதவி திட்டத்தில் ரூ.5 லட்சம் பெற்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.கலா செல்வி கூறினார்.