கடலூர், ஜன. 6- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப் பாடிபேருந்து நிலையத்திலிருந்து எம்.ஆர்.கே. நகர் வழியாக வரதராஜன் பேட்டை, கல்குணம், கிருஷ்ணாபுரம் வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் சாலை பழு தடைந்துள்ளது. அங்கு தார் சாலை அமைப்பதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஜல்லி கொட்டிச் சென்றனர். ஆனால் இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரம் இடுவதற்கு மாட்டு வண்டிகளை பயன்படுத்த முடியாமல் உள்ளது, மேலும் இருசக்கர வாக னங்களில் சென்றாலும் பழுதாகி விடுகிறது. இதனால் ஒவ்வொரு மூட்டையாக தலையில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என விவசாயிகளும், பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கிடப்பில் போடப்பட்ட தார் சாலையை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.. கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, விவசாயமே நம் உயிர் நாடி, எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் காலம் தாழ்த்தாமல் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.