districts

img

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சின்னதுரை உடல் அடக்கம்

கடலூர், ஜூன் 15- குவைத் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த  முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த வர் சின்னதுரை (வயது 40). சத்யா என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக  குவைத் நாட்டிற்கு சென்று வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர் மீண்டும் குவைத் நாட்டிற்கு செல்லாமல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சமையல் கலைஞராக வேலை செய்து வந்துள்ளார்

 இந்நிலையில் ஆறு  மாதங்களுக்கு முன்பு மீண்டும் குவைத் நாட்டிற்கு சென்று மங்குஃப் என்ற இடத்தில் தங்கி பணி புரிந்து வந்தார். 15 நாட்களில் சொந்த ஊருக்கு  வருவதாக தனது அண்ணன் சங்கரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த  புதன்கிழமை அதிகாலை  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  அதனைத் தொடர்ந்து தமிழக  அரசு உதவியுடன் குவைத் நாட்டில் இருந்து அவரது உடல் கேரளா மாநிலம் கொச்சி  வந்தடைந்தது. அங்கிருந்து அவரது உடல் தனி ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான  காட்டுமன்னார்கோவில் முட்டம் கிராமத்திற்கு  வந்தடைந்தது.  சின்னத்துரை உடலைப் பெற்ற உறவினர்கள்  வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சின்னதுரை உடலுக்கு அரசின் சார்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்  தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜாராம் மற்றும் சார் ஆட்சியர்  உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்,  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சின்னதுரை உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரைத் தொடர்ந்து சின்ன துரையின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. அவரது  முகத்தை கூட பார்க்க முடியாத நிலையில் சின்னதுரையில் மனைவி, தாயார் மற்றும் உறவினர்கள் அவரது சவப்பெட்டிக்கு இறுதி  சடங்கு செய்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இடுகாட்டில் சின்னதுரை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.