கடலூர், ஜூன் 24- கடலூர் மாவட்டத்தில் மீன் வளர்க்க 60 விழுக்காடு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு வருமாறு:- பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகப்படுத்தவும், மீன்வளர்ப்போரை ஊக்கப்படுத்தவும் மானியக் கடன் வழங்கப்படுகிறது. நீரினை மறுசுழற்சி முறையில் சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்து நன்னீர் மீன்வளர்ப்பு செய்ய, சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்புக்கு ஆதி திராவிடர், பழங்குடியினர் பயனாளிகளுக்கு ஒரு பிரிவுக்கு ரூ.7.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில், மொத்த செலவினத்தொகையில் இப்பிரிவினருக்கு 60 விழுக்காடு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் மானியத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் பரங்கிப்பேட்டையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 04144-243033 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.