அரியலூர், ஜன.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். புதிய இடத்தை தேர்வு செய்து அரசு தலைமை மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆண்டிமடம், தா.பழூர், ஜெயங்கொண்டம் வட்டார பகுதிகளிலும், அருகிலுள்ள மாவட்ட கிராமங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு தகுந்த அளவில் மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், பாண்டிச்சேரி என அனுப்பி அலைக்கழிக்காமலும், உயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கவும், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையிலேயே அனைத்து மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். புற நோயாளிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்ய வேண்டும். உள்நோயாளிகளின் பாதுகாவலர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடமும், குடிநீர், கேண்டீன் வசதியும் செய்து கொடுக்க வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட்டு, உடற்கூராய்வு செய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.செந்தில்வேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி, ஒன்றிய தலைவர் எஸ்.மீனா, பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் எ.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.