அரியலூர், பிப்.26 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பூவாணிப்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று இருப்பதைக் கண்ட பள்ளி மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) இராஜாராமிடம் தெரிவித்தனர். அந்த ஆந்தையை பார்க்கும் பொழுது, நமது ஊர்களில் வசிக்கும் ஆந்தையை விட வித்தியாசமான வெளிநாட்டு ஆந்தையைப் போன்ற தோற்றத்தில் இருந்தது. அதனால் பறக்க முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தன. மற்ற பறவைகள், நாய்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பள்ளியின் விலங்கியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் விஜயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பாண்டியன் ஆகியோர் ஆந்தையை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக வைத்தனர். உடனடியாக ஆண்டிமடம் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு விரைந்து வந்த வனச்சரக காப்பாளர்களிடம் அரியவகை ஆந்தை ஒப்படைக்கப்பட்டது. ஆந்தையை பாதுகாப்பான முறையில் எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டுவிட்டனர்.