அரியலூர், டிச.24 - தேசிய அளவில் பதக்கம் வென்ற தடகளம் வீரர், பகுதி நேர பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். மேலும், ‘‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ‘‘விளையாடு இந்தியா’’ திட்ட நிதியுதவியில் துவக்க நிலை தடகளம் பயிற்சிக்கான மாவட்ட மையம் அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட உள்ளது. விளையாடு இந்தியா மாவட்ட மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதிற்குட்பட்ட தடகளம் வீரர் (இருபாலர்) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகள் மற்றும் தற்போது அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தடகளம் விளையாட்டில் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) ஜன.3 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அரியலூர் 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.