வேலூர், மார்ச் 5- வேலூர் அடுத்த ஓட்டேரி ஏரியில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின்போது ஏரி முழுவதும் நிரம்பாமல் இருந்தது. ஏரியில் தேங்கிய சிறிதளவு தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏரியின் கரை ஓரத்தில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையம் அருகே தேங்கியுள்ள தண்ணீரில் ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததா அல்லது வெயிலின் தாக்கம் காரணமாக இறந்தனவா என விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் தண்ணீர் தேங்காத இடங்களில் ஏராளமான ஆடு மாடுகள் மேய்ந்து வருகின்றன. விஷம் கலந்த தண்ணீரை குடித்து கால்நடைகள் இறப்பதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.