districts

img

வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை:பொதுமக்கள் பீதி

உதகை தமிழகம் சாலை பகுதியில் வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இதனால்  அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் அருகே உலா வருவது வழக்கம்.

இந்தநிலையில் உதகை தமிழகம் சாலையில் சிறுத்தை ஒன்று கடந்த 28-ந் தேதி இரவு பதுங்கி இருந்து நடந்து சென்ற காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சிறுத்தை ஜூலை மாதமும் இறுதியிலும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை உதகை தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில்  வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வராண்டா பகுதியில் இருந்த வளர்ப்பு நாயை அலேக்காக கல்வி தூக்கி சென்றது.

குடியிருப்பு வாசிகள் பீதி

இதை தொடர்ந்து நாய் சத்தம் கேட்டதால் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்த குடியிருப்புவாசிகள் நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்ததில் சிறுத்தை நாயை தூக்கி சென்றது தெரிய வந்தது. இதனால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கூண்டு வைப்பு

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆறு மாதமாக இந்த பகுதியில் சிறுத்தை சுற்றி வருகிறது இதை பலர் நேரிலும், சிலர் கண்காணிப்பு கேமரா பதிவிலும் பார்த்துள்ளனர்.  ஆனாலும் சிறுத்தையை பிடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போல் 2 நாட்களுக்கு முன்பு எச்.பி.எப். பகுதியில் புலி ஒன்று புகுந்து பசு மாட்டையும் அடித்து சென்றுள்ளது. இதனால்  பயமாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் வனத்துறையினர் மாட்டை கொன்ற புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.