சேதுபாவாசத்திரம், ஜன.13- நிலக்கடலை பயிரில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்டச்சத்து கரைசல் தெளிக்கலாம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்டச் சத்து கரைசல் தெளிப்பது மிகவும் அவசியம். நுண்ணூட்டச்சத்து கரைசல் தயாரிக்க ஒரு ஏக்கருக்கு தேவையான டி.ஏ.பி. 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் 1 கிலோ, பிளானோபிக்ஸ் 125 மில்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் டி.ஏ.பி. உரத்தை (1 கிலோ) நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்துக் கொண்டு, அத்துடன் மேற்கண்ட பிறபொருட்களையும் (பிளானோபிக்ஸ் தவிர்த்து) கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கி மருத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தனியாக தெளிக்கவேண்டும். இந்த மாதிரியான கரைசலை விதைத்த 25-ஆவது நாள் மற்றும் 40-ஆவது நாள் என 2 முறை தெளிக்க வேண்டும். மேலும் 45-வது நாள் பூக்கும் தருணத்தில் களைக்கொத்தி மண் அணைக்கும் முன்பு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். நுண்சத்துக் கரைசல் தெளிப்பு மற்றும் ஜிப்சம் இடுவதால் அனைத்து பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை பயிர்கள் நேரடியாக எடுத்துக் கொண்டு உருவாகும் விழுதுகள் அனைத்தும் காய்களாக மாறி பொக்கற்ற திரட்சியான நல்ல எடையுடன் கூடிய தரமான கடலைப்பருப்புகள் உருவாகிறது. இதனால் ஒரு ஏக்கரில் 25 முதல் 80 சதவீதம் வரை கூடுதலாக மகசூல் கிடைக்கிறது. எனவே நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து அதிக லாபம் பெறலாம்’’ என கூறப்பட்டுள்ளது.