districts

திருவண்ணாமலையில் பயிர் விளைச்சல் போட்டி

திருவண்ணாமலை, டிச. 23- தமிழக அரசு வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் பயிர் சாகுபடி உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பத்தைக் கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2022-23ஆம் ஆண்டில் செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு பரிசுத் தொகை 5 லட்ச ரூபாயும், பதக்கமும் வழங்கப்படுகிறது. மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் நிலக்கடலை (இறவை) மற்றும் கரும்பு பயிருக்கு முதற்பரிசு ரூ.25,000, 2ஆம் பரிசாக ரூ.15,000, கம்பு, உளுந்து மற்றும் துவரை பயிர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000, 2ஆம் பரிசாக ரூ.10,000, வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி யில் நெல், நிலக்கடலை (இறவை) மற்றும் கரும்பு பயிருக்கு முதல் பரிசாக ரூ.15,000, 2ஆம் பரிசாக ரூ.10,000, கம்பு பயிருக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2ஆம்  பரிசாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. எனவே, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பக் கட்டணமாக செம்மை நெல் சாகுபடி போட்டிக்கு ரூ.150, மாநில அளவிலான போட்டிக்கு ரூ.100, மாவட்ட அளவிலான போட்டிக்கு ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.