districts

img

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவன்

திருவள்ளூர், பிப்.9- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சாலையில் கிடந்த 200 ரூபாய் நோட்டை பொன்னேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய கரும்பூர் கிராமத்தில் வசிப்பவர் பாபு. இவரது மகன் அபினேஷ்வரன் (11). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே, 200 ரூபாய் நோட்டு கீழே கிடந்துள்ளது. அதை எடுத்து யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியாமல் தனது தந்தை பாபுவுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த தந்தையை அழைத்துக் கொண்டு பொன்னேரி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணி யில் இருந்த காவலர் ராஜசேகரனிடம் 200 ரூபாயை ஒப்படைத்தார். எது கிடைத்தாலும் தமக்கே சொந்தம் என்று ஆட்டையை போடும் இந்த காலகட்டத்தில், தொலைத்தவர் வேதனைப்படுவார் என்ற உயரிய எண்ணத்துடன் காவல் நிலை யத்தில் ஒப்படைத்த சிறுவனின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.