அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்களை சேர்க்க பாரதீய பண்பாட்டு சேவா கேந்திரம் அமைப்பு பயிற்சி நடத்துவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி வாலிபர் மற்றும் மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனியில் தனியார் கல்லூரியில் பாரதீய பண்பாட்டு சேவா பாரதி அமைப்பின் சார்பில் நடைபெற இருந்த பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதின் மாவட்ட தலைவர் கே.ஆர்.லெனின் , மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன்,.புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட செயலாளர் உதுமான் அலி ,அகில இந்திய மாணவர் பிளாக் தேசியக்குழு உறுப்பினர் திவாகரன் ,இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டி.நாகராஜ் ,அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்க மாவட்டச் செயலாளர் ரஞ்சித் குமார் ,அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பிஜு உள்ளிட்ட இடது சாரி மாணவர் -வாலிபர் அமைப்புகள் சார்பில் தேனி ஆட்சியர் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர் .
அந்த மனுவில் தேனி அருகே வீரபாண்டியில் இயங்கி வரும் தேனி செளராஷ்ரா அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் ,சங் பரிவார் அமைப்பாகிய பாரதீய பண்பாட்டு சேவா கேந்திரம் என்ற அமைப்பு அக்னிபாத் ,அக்னி வீர் என்ற பெயரை பயன்படுத்தி இலவச பயிற்சி முகாம் என்ற பெயரில் ஜூலை 15,16,17 ஆகிய தேதிகளில் மாணவர்கள்,வாலிபர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
வாலிபர்களின் கனவுகளை பறிக்கும் அக்னிபாத் போன்ற திட்டங்களை பெரும்பாலான அரசியல் ,வாலிபர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ,அத்திட்டத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான மாணவ -மாணவிகள் பயின்று வரும் கல்லூரி வளாகத்தில் குறிப்பிட்ட சங்பரிவார் அமைப்பினரின் பயிற்சி முகாமை அனுமதிக்க கூடாது .மேலும் இது போன்ற பயிற்சி முகாம்களை தொடர்ந்து நடத்த அனுமதிக்கும் தேனி செளராஷ்ரா அறிவியல் மற்றும் கலை கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் படி அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று பயிற்சி முகாம் தொடங்கிய நிலையில் கல்லூரிக்கு வெளியே இடதுசாரி மாணவர் மற்றும் வாலிபர் அமைப்பினர் பயிற்சி முகாமை தடுத்த நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி மாணவர் மற்றும் வாலிபர் அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.