தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலையின் குறுக்கே அமைக்கப்படும் சிறு பாலத்தை விரைந்து கட்டி முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு வலியுறுத்தி இருந்தது. பேராவூரணி கடைவீதி, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி முதன்மைச் சாலை, சேது சாலை, ஆவணம் சாலை ஆகிய இடங்களில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன. இதனொரு பகுதியாக ஆவணம் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஓர் இடத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு, அங்கிருந்து சாலையின் குறுக்கே மற்றொரு பக்கம் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலுடன் இணைப்பதற்காக, ஆவணம் சாலையில், முன்னாள் நகரத் தந்தை வேலாயுதம் செட்டியார் வீடு அருகே, சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. அதில் ஒரு பகுதி பாலப்பணி முடிவடைந்த நிலையில், மற்றொரு பகுதி இதுவரை பணி முடிக்கப்படாமல் இருந்தது.
இதனால் இந்த வழியில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் சாலைப் பணி நடைபெறுவது குறித்து எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வரும் வருவோர் அருகில் வந்து தடுமாறி விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே எச்சரிக்கைப் பலகை வைக்கவும், சாலை பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில், செயலாளர் வே.ரெங்கசாமி நெடுஞ்சாலை துறையைக் கேட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி விரிவான செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து கடந்த 10 தினங்களாக நடைபெற்ற பணி முடிந்து, வெள்ளிக்கிழமை போக்குவரத்து பயன்பாட்டிற்கு பாலம் திறந்து விடப்பட்டது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத் துறையினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.