சேலம், ஜூன் 07-
சேலம் அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாயுடன் இரு குழந்தைகளையும் உயிரை காப்பாற்றிய வாலிபர் சங்கத்தினரின் செயல் அப்பகுதி மக்களிடம் உருக்கதை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்காவில் உள்ளது லத்துவாடி கிராமம். இந்த பகுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் 17 பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதி முழுவதும் உள்ள கிராம மக்கள் உயிர் பயத்தில் இருக்கின்றனர். லந்துவாடி கிராமத்தில் வசித்து வரும் பிந்து. இவர் தனது 8 வயது மகள் தேவிபாலா மற்றும் 6 வயது மகன் அருண்ஜெட்லி ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். இவரது கணவர் பழனிவேலு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இறந்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களால் பிந்துவிற்கு வயிற்று போக்கு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு செல்லாமல் கடையில் மருந்தை மட்டு வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார். நிலைமை மேலும் மோசமானதால் நடக்கவே முடியாமல் ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ஆம்புலன்சும் வந்திருக்கின்றது. ஆனால் மருத்துவமனைக்கு பிந்துவுடன் யாரும் உடன் செல்ல ஒருவரும் முன்வர வில்லை. தன் தாயுடன் அவரது குழந்தைகள் இருவர் மட்டும் உடன் செல்ல தயாராக இருந்திருக்கின்றனர். ஆனால் ஆம்புலன்சில் வந்தவர்கள் பெரியவர்கள் யாரும் வாராமல் அழைத்து செல்ல முடியாது என கூறி ஆம்புலன்சை திரும்ப கொண்டு சென்று விட்டனர்.
இதனால் அன்று (கடந்த வெள்ளியன்று ) இரவு மழுவதும் பிந்து வேதனையால் துடித்திருக்கிறார். சனிக்கிழமையன்று மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியிருக்கிறார். இதனால் துடிதுடித்து போன இரு குழந்தைகளும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் எங்க அம்மாவை காப்பாத்துங்க என கெஞ்சியிருக்கின்றனர். கொரோனா தொற்று பயத்தின் காரணமாக யாரும் முன்வரவில்லை. இதனையடுத்து குழந்தை தேவிபாலா சமயோசிதமாக அம்மாவின் தொலைபேசி மூலம் கேரளா பாலக்காட்டில் உள்ள தனது மாமாவிற்கு (பிந்துவின் தம்பி) போன் செய்திருக்கிறார்.
பதறிப்போன பிந்துவின் மாமா அங்கிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் உதவி தேடி சென்றிருக்கிறார். சிபிஎம் பாலக்காடு மாவட்டக்குழு அலுவலகத்தில் இருந்த பாலர் சங்க பொறுப்பாளர் ராஹேஷ், பிந்துவின் தொலைபேசிக்கு போன் செய்து அவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுக்க சொல்லி நிலைமையை முழுவதுமாக கேட்டறிந்திருக்கிறார். பின்னர் அவர், மாதர் சங்க மாநில செயலாளர் கோவை ராதிகா தொடர்பு கொண்டு நிலைமையை கூறியிருக்கிறார். இதையடுத்து சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன் ஏற்பாட்டில் காப்பீட்டு ஊழியர் சங்கம் மற்றும் வாலிபர் சங்க இலவச ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு வாலிபர் சங்க கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் முன்னணி ஊழியர்கள் கதிர்வேல், குருபிரசன்னா ஆகிய இருவரும் லந்துவாடி கிரமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் சிபிஎம் செயலாளர் பிரவீன் அப்பகுதியில் உள்ள விசிக தலைவர்கள் காஜாமைதீன். இப்ராஹீம் ஆகியோரிடம் பேசி , பிந்துவின் உயிர் போவதற்குள் எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் அங்கு அருகிலேயே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அனுப்பும் மாறு கேட்டிருக்கிறார். உடனே கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பலரிடமும் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசியதில் விசிக நிர்வாகிகள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் லத்துவாடி வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிந்து மற்றும் அவரது இரு குழந்தைகளையும் ஏற்றிக் கொண்டு ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதற்கு வீராகனூர் சாலையை அடைந்திருந்த வாலிபர் சங்க ஆம்புலன்ஸ் எதிரே சந்தித்தன. பின்னர் 108 ஆம்புலன்சிலிருந்து பிந்து மற்றும் இரு குழந்தைகளையும் மாற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு குளுக்கோஸ் வாங்கி ஏற்ற முயன்றனர். ஆனால் குளுக்கோஸ் ஏற்றும் ஸ்டாண்டு இல்லை. இந்நிலையில் கதிர்வேல் ஆம்புலன்சை இயக்க, குருபிரசன்னா கையிலே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்துக் கொண்டு, அங்கிருந்து கொட்டும் மழையில் சேலம் நோக்கி கிளம்பினர். செல்லும் வழியில் பிந்துவிற்கு ஓரளவு நினைவு திரும்பியது. அப்போது இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் சேலத்தை வந்தடைந்த போது அங்கு காத்திருந்த பிரவீன் உள்ளிட்டோர் பிந்து மற்றும் இரு குழந்தைகளையும் மருத்துவர்களிடம் பேசி அவசர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே கேரளாவிருந்து பிந்துவின் தம்பி மற்றும் கட்சி தோழர்களுடன் சேலம் வந்தடைந்தனர். அதன் பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவித்தனர். அப்போதுதான் அனைத்து தோழர்களின் முகத்திலும் சிறிது மலர்ச்சி ஏற்பட்டது.
பின்னர் தொடர் சிகிச்சைக்கு பின்னர் ஓரளவு உடல் நிலை சீரடைந்த நிலையில்; பிந்துவின் சகோதரர் கேரளாவிற்கு பிந்துவையும், இரு குழந்தைகளையும் கேரளாவிற்கே அழைத்து செல்ல விரும்பினர். அதன்படி அவருடன் பிந்து மற்றும் இரு குழந்தைகளையும் அனுப்பி வைத்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் வாலிபர் சங்கத்தினரின் உயிர்காக்கும் பணியினை வெகுவாக பாராட்டினர்.