புதுக்கோட்டை, பிப்.17- பஞ்சாப்பில் 3 மாதங்களுக்கு முன்பே பாஜக-வுக்கு விடை கொடுத்துவிட்டார்கள் என்று ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம் பரம் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசியதாவது: அதிமுகவினர் மேடையில் பேசும் வசனங்களை கேட்டு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை, அவர்கள் பேப்பர் படிப்பதையும் தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்திவிட்டார்கள் போல. அதனால் தான் திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று கூறு கின்றனர். மகளிருக்கு இலவச பேருந்து, கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக நடத்தாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தியதே ஒரு சாதனைதான். 5 ஆண்டுக்குள் திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்று வார்கள் என நம்புகிறோம். குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
பாஜக-வுக்கு பிரியாவிடை
பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் ஆம் ஆத்மி என பிரதமர் மோடி சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது. கோவா வில் ஆம் ஆத்மி வாக்குகள் காங்கி ரஸ் கட்சிக்குத் தான் பாதிப்பை ஏற் படுத்தும். ஆம் ஆத்மி பா.ஜ.க. வுக்கு ஆதரவாகத்தான் நிற்கின்றனர். பஞ்சாப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பே பாஜக-விற்கு மக்கள் பிரியாவிடை கொடுத்து விட்டனர்.
2026ல் தான் சட்டமன்ற தேர்தல்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தலை அவர்கள் ஆட்சி காலத்தில் 2016 ஆம் ஆண்டு ஏன் நடத்தவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அவர் பிரச்சார களத்திற்கு வந்து வாக்குகளை கேட்கட்டும். பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி, அவர் முதலில் அரசியல் சாசன சட்டத்தை படிக்க வேண்டும். சட்ட மன்றத்தை முடக்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் அபத்தமான வார்த்தை, சட்டமன்றம் என்ன ஜல்லிக்கட்டு காளையா? ஜல்லிக்கட்டு காளையை அடக்கு வது போல் சட்டமன்றத்தை முடக்க முடியாது. தமிழகத்தில் 2026 ல் தான் அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அதற்கிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து பேசுவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.