காஞ்சிபுரம், மார்ச்15 - காஞ்சிபுரத்தில் செஸ் சாம்பியன் உட்பட 3 பேர் மீது அடையாளம் தெரியாத ரவுடி கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தேசிய செஸ் விளையாட்டு வீரர் கவியரசு (23), நரேஷ் (வயது22) , மாணவர் ராகுல் (16) ஆகியோர் நரசிங்கராயர் தெரு வழியாக வீட்டுக்கு செல்லும்போது 15 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்து 2000 ரூபாய் கொடுத்தால் தான் தங்களை கடந்து செல்லமுடியும் என தகராறில் ஈடுபட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மூன்று பேரையும் மர்ம நபர்கள் கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த 3 பேருக்கும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நரேஷ், கவியரசு ஆகிய இருவர் சென்னைக்கும், ராகுல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய ரவுடிகளை பிடிக்க மாவட்ட தனிப்படையினர் மற்றும் சிவகாஞ்சி காவல் துறையினர் தீவிரம் தேடிவருகின்றனர்.