ஈரோட்டில், ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு -சிஐடியு ஈரோடு கிளை சார்பில் மத்திய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா 2023இன் ஒரு பகுதியாக மின் விநியோக பணியை தனியாருக்கு விடப்படும். இத்திட்டத்தின் காரணமாக மாநில மின்சார வாரியங்களில் மின் கணக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படும். ஒன்றிய அரசின் தனியார்மயக்கொள்கையின் ஒரு திட்டமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை மேற்கொள்ளப்பட உள்ளது. மாநில அரசுகளை இப்பணிகளை மேற்கொள்ள நிர்பந்திக்கிறது.
இவ்வாறு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் ஒன்றிய அரசு அறிவித்துள்ளவாறு மின் நுகர்வோர்களின் உச்சபட்ச தேவை நேரத்தில் மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க வழிவகை செய்கிறது. அதற்கு இந்த தொழில் நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களுக்கும், மின்வாரிய பணியாளர்களுக்கும் எதிரான இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு ஈரோடு கிளை சார்பில் மத்திய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலச் செயலாளர் சி.ஜோதிமணி தலைமை வகித்தார். இதேபோல கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, சென்னிமலை, பெருந்துறை, சித்தோடு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதில் பி.ஸ்ரீதேவி, எஸ்.சுப்ரமணியன், ஏழுமலை, கே.ஜெயக்குமார் மற்றும் பொறியாளர் சங்க செயலாளர் திருநீலகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திரளான ஊழியர்களும் கலந்து கொண்டனர்.