கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்கோம்பை என்னும் மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்..
இப்பகுதி மலைக்கிராமங்களில் போதிய தார் சாலை வசதி இல்லாததாலும் இருக்கும் பாதையும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு சிரமம் அடைந்து வருகின்றனர்.மலைக்கிராம பாதை மோசமான நிலையில் இருப்பதாலும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும் வாகன ஓட்டிகள் யாரும் இப்பாதை வழியே செல்ல தயங்குகின்றனர்..
இதனால் அவசர கால நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் வரக்கூடிய அளவிற்கு கூட சாலைகள் இல்லாததால் பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்..
இந்நிலையில், நெல்லித்துறை பகுதியை சேர்ந்த மணி என்பவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நீராடி கிராமம் வரை கொண்டு வரப்பட்டது.ஆனால் இறந்தவர் இல்லம் கடம்பன் கோம்பை கிராமத்தில் உள்ள நிலையில் மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க இயலாது என கூறி அங்கேயே உடலை இறக்கி விட்டனர்.
வேறு வாகனங்களும் மலைக்கிராம மண் பாதையில் வரவில்லை என்பதால் அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பகுதி மக்களே டோலி கட்டி உடலை தோளில் சுமந்து எடுத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..
நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்டபட்ட மலைக்கிராமங்களில் வாகனங்கள் செல்லும் பாதைகளை சீரமைத்து தார் சாலைகளாக மாற்றி தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்..