கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்ட கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் ரகுநாதன். இவர் பாலியல் ரீதியாக மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழனன்று இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வெள்ளியன்று அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது எனவும், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், விசாரணை குழு அமைத்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
மாதர் சங்கம் மனு
இதற்கிடையே, மாணவிகளிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் வாட்ஸ் அப்பில் பதிவிட்ட அரசு கல்லூரி பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். இதனை, மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் சுதா, கிழக்கு நகர செயலாளர் வனஜா ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் அளித்தனர்.
பேராசிரியர் கைது
இதற்கிடையே, மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் மீது பல்வேறு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளியன்று அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.