districts

img

கோவையில் 85 வார்டுகளில் பாஜக - 20 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் கோவை எங்களின் கோட்டை என்ற பாஜக 85 வார்டுகளில் வைப்பு தொகை (டெபாசிட்) இழந்து தாமரை மல்லாந்து மண்ணைக்கவ்வியது.

பிரதான கட்சியான அதிமுகவும் 20 வார்டுகளில் வைப்பு தொகை இழந்து கூணிக்குறுகியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  செவ்வாயன்று 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை இறுதியில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

திமுக மட்டும் 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மதிமுக 3 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 2 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியினர் உடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்த வார்டான 92 வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிசெல்வன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாநகராட்சியில், ஒற்றை இலக்கத்திற்குள் சுருங்கி படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதிமுக 99 வார்டுகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 வார்டிலும் போட்டியிட்டன. வெறும் 3 இடங்களில் மட்டுமே அதிமுக வென்றது. வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்ற அதிமுக, எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

சுயேச்சையாக களமிறங்கிய எஸ்டிபிஐ ஒரு இடத்தில் வென்றது. கோவை மாநகராட்சியில் பாஜக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. இதேபோல மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

கடந்த 2011 ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2 வார்டுகளை வென்ற பாஜக, இம்முறை ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. 98 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக அனைத்து வார்டுகளிலும் தோல்வியை தழுவியது. அதில் 85 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். 13 வார்டுகளில் டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது. இதேபோல நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. கடந்த முறை காரமடை நகராட்சியை கைப்பற்றிய பாஜக, இந்த முறை ஒரு வார்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள அனைத்து நகராட்சிகளையும் பாஜக தோல்வியை தழுவியது. 33 பேரூராட்சிகளில் உள்ள 504 பதவிகளில் வெறும் 5 இடங்களை மட்டுமே பாஜக கைப்பற்றியுள்ளது. அதிகபட்சமாக செட்டிபாளையம் பேரூராட்சியில் 2 இடங்களில் வென்றுள்ளது. அன்னூர், புலுவப்பட்டி, சிறுமுகை ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.