சென்னை, ஏப். 17- ஆவடி பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என தமுஎகச கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆவடி பகுதி மாநாடு ஆவடி-காமராஜர் நகரில் ஞாயிறன்று (ஏப். 17) நடைபெற்றது. சங்கத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் மணிநாத், ஆவடி மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஜான் உள்ளிட்டோர் பங்கேற்ற இம்மாநாட்டில், கவியரங்கம், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களின் கலந்துரையாடல், கராத்தே சாகச நிகழ்வுகள் உள்ளிட்டவை நடைபெற்றன. பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரையாற்றினார். தலைவராக கரலை கண்ணன், துணை தலைவராக பாஸ்கரன், செயலாளராக ரகுராமன், பொருளாளராக அனுநிஷா உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், ஆவடி பகுதியில் தமிழக அரசு விளையாட்டு அரங்கம், கலையரங்கம் அமைக்கவேண்டும், ஆவடியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும், ஆவடியை ஒட்டியுள்ள கரலப்பாக்கம், பாலவேடு, வெள்ளச்சேரி, பாண்டேஸ்வரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை பராமரித்து மேம்படுத்தவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.