districts

அலங்கார பணியால் புலிக்குகை சேதமடையும் அபாயம்

மாமல்லபுரம், ஏப். 3 - மாமல்லபுரம் புலிக்குகை சிற்பத்தின் அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பணிகள் செய்வதால் சிற்பம் சேதமடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மாமல்லபுரத்தில் ஐந்து ரதம், கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு, சாலுவான் குப்பம், புலிக்குகை உள்ளிட்ட பல்லவர் காலத்து சிற்பங்கள் உள்ளன. இந்த பாரம்பரிய சிற்பங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால், தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, பராமரித்து வருகிறது. மேலும் சிற்பங்களின் பாதுகாப்புக்காக சிற்ப வளாகங்களில் நவீன எந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில் புலிக்குகை சிற்ப வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் அலங்காரம் சார்ந்த பணிகள் நடைபெறுகிறது. இதற்காக புலிக்குகை சிற்பத்தின் மிக அருகில் அதிர்வு ஏற்படும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால் புலிக்குகை சிற்பம் சேதமடையும் அபாயம் உள்ளது. மாமல்லபுரத்தில் சிற்பங்கள் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மனித உழைப்பின் மூலம் தளவாடங்களை பயன்படுத்தி மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். அகழ்வாராய்ச்சி பணிகளும் இந்த விதிகளை பின்பற்றியே நடக்கிறது. இதற்கு மாறாக, அலங்கார பணிக்கு பொக்லைன் பயன்படுத்துகின்றனர். எனவே, தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் சிற்பங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.