கடலூர், ஆக.8- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக.1 முதல் 8 ஆம் தேதி வரையில் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க தமிழக அரசால் அறிவுறுத்தப் பட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறையின் மூலம் கொரோனா விழிப்புணர்வு பேரணிகள், துண்டுபிரசுரம் வழங்குதல், சைக்கிள் பேரணி, கலை நிகழ்ச்சிகள், சோப்பினால் கைகளை சுத்தம் செய்யும் முறை, உறுதிமொழி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவையும், கோலம் வரைதல், ஒவியம் வரைதல், சொற்றொடர் உருவாக்குதல், விழிப்புணர்வு மொழி வடிவம் உருவாக்குதல், வீடியோ குறும்படம் உள்ளிட்ட பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் மூலம் நடத்தப்பட்ட கொரோனா விழிப்புணர்வு போட்டிகளில் வென்றவர்கள், சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கடலூர்-நடுவீரப்பட்டு, பரங்கிப்பேட்டை வட்டம் டி.எஸ்.பேட்டை, காட்டுமன்னார் கோயில் வட்டம் வீரனந்தபுரம் ஆகிய ஊராட்சிகளை பாராட்டி கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பவன்குமார் ஜி.கிரியப்பன வர், இணை இயக்குநர்(நலப்பணிகள்) பி.என்.ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) டி.செந்தில்குமார், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா.ரோஸ்நிர்மலா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.